முகப்பு
கடலூர்

கூட்டணி பலம் இருந்தும் கடலூரில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட பாமக!

பலமான கூட்டணி அமைந்தும், கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:59 AM
பகிர்:


பலமான கூட்டணி அமைந்தும், கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது அந்தக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 கடலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட 21 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தமுள்ள 13,63,650 வாக்காளர்களில் 10,43,380 பேர் வாக்களித்தனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் 5,22,160 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பிரதான போட்டியாளரான பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி 3,78,177 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். 
 கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களும், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இந்த 6 தொகுதிகளிலும் திமுக 3,76,870 வாக்குகளையும், அதிமுக 3,70,077 வாக்குகளையும் பெற்றன. தனித்து போட்டியிட்ட பாமக 1,18,803 வாக்குகளைப் பெற்றது. எனவே, கூட்டணி பலத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என பாமகவினர் நம்பினர். ஆனால், 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால் அந்தக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 இதுகுறித்து பாமக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, கூட்டணிக்குத் தலைமை வகித்த அதிமுகவில் கடுமையான கோஷ்டி பூசல் நிலவியது. 
அதிமுக கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும், மேற்கு மாவட்டச் செயலர் ஆ.அருண்மொழிதேவனுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்தது. மேலும், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வமும் அமைச்சருக்கு எதிராகவே செயல்பட்டு வந்தார். விருத்தாசலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன், டிடிவி தினகரன் ஆதரவு நிலை எடுத்து விட்டார். எனவே, அதிமுகவினர் இடையேயான கோஷ்டி பூசலை சமாளிக்கவே நாங்கள் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. இதற்காக அன்புமணி ராமதாúஸ நேரடியாக கடலூர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீரவில்லை. இந்தப் போக்கானது எங்களுக்கான வாக்கு சதவீதத்தை குறைத்து விட்டது என்றார் அவர்.
  இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பாமக அண்மைக் காலமாக தலித் எதிர்ப்பு பிரச்னையில் அதிகமாக சிக்கி வருகிறது. இதனால், தலித்துகள் பலமாக உள்ள கடலூர் மக்களவைத் தொகுதியில் அவர்களுக்கு எதிரான மனநிலை தானாகவே உருவாகிவிட்டது. இதை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் பாமக மேற்கொள்ளவில்லை. அதிமுக சார்பிலும் அந்த முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே பாமக தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக 3,70,077 வாக்குகளையும், பாமக 1,18,803 வாக்குகளையும் பெற்றன. இதன் கூட்டுத்தொகை 4,88,880. ஆனால், தற்போது 1,10,703 வாக்குகள் குறைவாகவே பாமக பெற்றுள்ளது. இது, தலித்துகளிடம் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அதிமுகவுக்கான வாக்குகள் பாமகவுக்கு பெரும்பான்மையாகச் செல்லவில்லை என்பதையே காட்டுகிறது. பாமகவின் செயல்பாடு காரணமாக அவர்கள் தலித்துகளிடம் நம்பிக்கையை இழந்ததால் தோல்வியை தழுவ நேரிட்டது. மற்றபடி, அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கு சென்றுள்ளதை மறுக்க முடியாது என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →