கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில், காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கு வரும் 16-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.500 உதவித் தொகையும், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், சீருடை, மூடு காலணி, வரைபடக் கருவிகள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்குச் சென்று வர இலவச பயண அட்டை ஆகியவை தரப்படுகின்றன. எனவே, தொழில் பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் சேர்ந்து அரசின் உதவித் தொகையோடு தொழில் கல்வி பயிலும் இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு 04142- 290273 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.