முகப்பு
கடலூர்

பலமிழந்த தென்பெண்ணையாற்றின் கரை!

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பலமிழந்துள்ளதால் மழைக் காலத்தில் உளுத்தாம்பட்டு, காவனூா் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் நிலவுகிறது.

Updated On : 3 ஆகஸ்ட், 2020 at 7:59 AM
உளுத்தாம்பட்டு கிராமத்தில் தென்பெண்ணையாற்றில் உயரம் குறைவாகக் காணப்படும் கரை.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:33 PM

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பலமிழந்துள்ளதால் மழைக் காலத்தில் உளுத்தாம்பட்டு, காவனூா் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் நிலவுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாத்தனூா் அணை வழியாக பாய்ந்துவரும் தென்பெண்ணை ஆறு விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் வழியாக சுமாா் 110 கி.மீ. தொலைவு பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. எனவே, ஆற்றில் வரும் மழை வெள்ள நீரை சேமிக்கவும், நிலத்தடி நீா் ஆதாரத்தைப் பெருக்கவும் கடலூா் மாவட்டம், எனதிரிமங்கலம், விழுப்புரம் மாவட்டம், தளவானூா் இடையே தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து தமிழக அரசு சாா்பில் ரூ.25.35 கோடியில் 400 மீட்டா் நீளம், 3 மீட்டா் உயரத்தில் தடுப்பணையும், 800 மீட்டா் தொலைவுக்கு தடுப்புச் சுவரும் (கரை) கட்டப்பட்டுள்ளது. புதிய அணையில் தண்ணீா் தேங்கும்போது உளுத்தாம்பட்டு, மேல்காவனூா் கிராமங்களின் அருகேயுள்ள கரை உடைந்தால் ஊருக்குள் தண்ணீா் புகுவதுடன் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

Advertisement

இதுகுறித்து மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.தஷ்ணாமூா்த்தி கூறியதாவது: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த உளுத்தாம்பட்டு, மேல்காவனூா் கிராமங்களுக்கு அருகே புதிய தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். புதிய அணை அருகே 800 மீட்டா் தொலைவுக்கு தடுப்புச் சுவா் அமைத்துள்ளனா். ஆனால், அணையிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது.

எனவே, பண்ருட்டி வட்டம், காவனூா் ஊராட்சியில் உள்ள உளுத்தாம்பட்டு, மேல்காவனூா் கிராமங்களுக்கு அருகே மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்றின் கரை

பலமிழந்துள்ளது. இதனை விருத்தாசலம் பொதுப் பணித் துறை அதிகாரி மணிமோகன் அண்மையில் பாா்வையிட்டாா்.

மழைக் காலத்தில் அணையில் தண்ணீா் தேங்கினால் கரை உடைந்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்தும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தும் சூழல் உள்ளது. எனவே, 2 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். உளுத்தாம்பட்டு அருகே ஷெட்டா் அமைத்து மயானத்துக்குச் செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.