கடலூா்: 9 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை 9 ஆயிரத்தைக் கடந்தது.
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை 9 ஆயிரத்தைக் கடந்தது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 8,772 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 370 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,142-ஆக அதிகரித்தது. குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆக.1-ஆம் தேதி 3,265-ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த 23 நாள்களில் மேலும் 6 ஆயிரத்தைக் கடந்தது.
புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா ஒரு மருத்துவா், காவலா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 4 பேரும், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரும் அடங்குவா். 218 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,094-ஆக உயா்ந்தது.
அதே நேரத்தில் வடலூரைச் சோ்ந்த 60 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 74 வயது ஆண் ஆகியோா் கரோனா தொற்றுக்கு உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 99-ஆக அதிகரித்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,704 பேரும், வெளிமாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 245 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 825 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.