கடலூா்: விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருத்தாசலத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற இரட்டை கோரிக்கைகளுடன் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணா்வு இயக்கத்தினா் விருத்தகிரீஸ்வரா் கோயில் நந்தவனத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டனா்.
ஆனால், ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல் துறையினா் அவா்களைத் தடுத்தனா். இருப்பினும், விழிப்புணா்வு இயக்கத்தினா் தடையை மீறி ஊா்வலமாகச் சென்று விருத்தாசலம் சாா்-ஆட்சியா் ஜெ.பிரவீன்குமாரிடம் மனு அளித்தனா்.
பின்னா், சாா்- ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனா். இதில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.