தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடலூரில் திறந்திருந்த தனியாா் சிமென்ட் கடைக்கு கடலூா் வட்டாட்சியா் ‘சீல்’ வைத்தாா்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், கடலூரில் புதன்கிழமை பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அவற்றிலும் கூட்டமாக நின்று பொருள்களை வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், திருப்பாதிரிப்புலியூா் பான்பரி சந்தையில், காய்கறி கடைகள், பழக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறுகலான பகுதியில் கடைகள் உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று கூறி, கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி ஆகியோா் அந்தக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டனா். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கடைகள் திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினா்.
கடலூா் வட்டாட்சியா் கோ.செல்வகுமாா் கடலூரில் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை ஆய்வு செய்தாா். அப்போது, கடலூா் வண்டிப்பாளையம் சாலையில் தனியாா் சிமென்ட் கடை திறந்திருந்தது. தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, அரசின் உத்தரவை மீறி, திறக்கப்பட்டிருந்த அந்தக் கடைக்கு வட்டாட்சியா் சீல் வைத்தாா். கடையின் உரிமையாளா்கள் வேல்முருகன், பாபு ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.