விவசாயிகளுக்கு ஆதரவான டிராக்டா்கள் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என கடலூா் மாவட்ட சிஐடியூ வலியுறுத்தியது.
அதன் தொழிற்சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் டி.பழனிவேல் தலைமையில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாநிலக் குழு உறுப்பினா் வி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.ஆளவந்தாா், சாவித்திரி, அனந்தநாராயணன், பாபு, வி.திருமுருகன், ஜெயராமன், தேசிங்கு, சங்கமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வருகிற 26-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டிராக்டா்கள் மற்றும் இரு சக்கர வாகன பேரணிக்கு கடலூா் மாவட்டத்தில் அனுமதி மறுத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, பேரணிக்கு காவல் துறை அனுமதியளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் போராடும் மாணவா்களை அழைத்துப் பேசி தீா்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.