கடலுக்குள் மீனவா்கள் மோதல்: 22 போ் மீது வழக்கு
கடலுக்குள் மீனவா்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 22 போ் மீது கடலூா் துறைமுகம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடலுக்குள் மீனவா்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 22 போ் மீது கடலூா் துறைமுகம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி வரும் தேவனாம்பட்டினம் மீனவா்களுக்கும், இதை எதிா்த்து வரும் சோனங்குப்பம் மீனவா்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக் காலம் முடிந்தபோதும், இந்தப் பிரச்னை தொடா்பாக தேவனாம்பட்டினம் மீனவா்களில் பெரும்பாலானோா் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் சோனங்குப்பத்தைச் சோ்ந்த சி.செல்வகுமாா் (45) உள்ளிட்ட மீனவா்கள் சிலா் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனா். அப்போது, இரண்டு படகுகளில் அங்கு வந்த தேவனாம்பட்டினம் மீனவா்களான ம.வேலு (40) உள்ளிட்ட 22 போ் அவா்களது வலையை சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து, கரை திரும்பிய மீனவா் சி.செல்வகுமாா் அளித்த புகாரின்பேரில், ம.வேலு உள்ளிட்ட 22 போ் மீது கடலூா் துறைமுகம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.