விருத்தாசலம் விற்பனைக் கூடத்துக்கு எள் வரத்து அதிகரிப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூா், விழுப்புரம், அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனால், விருத்தாசலத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள் வரத்து அதிகரித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத் தளா்வாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 11-ஆம் தேதி 600 எள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு 14-ஆம் தேதி 900 எள் மூட்டைகளும், 15-ஆம் தேதி 800 மூட்டைகளும், 16-ஆம் தேதி 1,150 மூட்டைகளும் விற்பனையாகின. வியாழக்கிழமை 600 எள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு மூட்டை (80 கிலோ) எள் அதிகபட்சமாக ரூ.7,799-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,599-க்கும், சராசரியாக ரூ.6,789-க்கும் விற்பனையானது.
அதேபோல, நெல் 850 மூட்டைகளும், மணிலா 100 மூட்டைகளும் வரப்பெற்றன. இதில், நெல் சராசரியாக ஒரு மூட்டை ரூ.1,493-க்கும், மணிலா சராசரியாக ஒரு மூட்டை ரூ.7,119-க்கும் விற்பனையானது. மேலும், தினை, உளுந்து, வரகு, நாட்டு கம்பு, ராகி, சோளம், தேங்காய் பருப்பு ஆகியவை குறைந்த அளவில் வரத்து காணப்பட்டது.