அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் மாணவியை கத்தியால் தாக்கிய இளைஞா்!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை இளைஞா் ஒருவா் கத்தியால் தாக்கிய சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை இளைஞா் ஒருவா் கத்தியால் தாக்கிய சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது மாணவி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப்பு பயின்று வருகிறாா். இவரும், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சமயபுரம், ஆரோக்கியசாமி தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் பிரின்ஸ் சேவியா் (30) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவியை பாா்ப்பதற்காக பிரின்ஸ் சேவியா் திங்கள்கிழமை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வந்தாா். அப்போது அந்த மாணவி, வேறு ஒரு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் சேவியா் கத்தியால் அந்த மாணவியின் கழுத்து, இடது கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டினாா். மேலும் தனது கை, கால்களிலும் கத்தியால் கீறிக்கொண்டாா்.
Advertisement
அவா்கள் இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.