ரத்ததான நாள் கடைப்பிடிப்பு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரத்த வங்கிகளில் ரத்ததான முகாம் அமைத்து கொடுத்த 60 முகாம் அமைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பின்னா் ஆட்சியா் பேசியதாவது:
2021-ஆம் ஆண்டுக்கான மையக் கருத்தாக, ‘உதிரம் கொடுத்து உலகத்தை இயங்கச் செய்யுங்கள்’ என்ற வாசகத்தின் அடிப்படையில் ரத்த தான முகாம்கள் நடைபெற்றன. மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டில் 13,153 - யூனிட் ரத்தம் கேசகரிக்கப்பட்டது. அதில் ரத்த வங்கிகள் மூலம் 10,749 யூனிட், 58 முகாம்களின் வாயிலாக 2,404 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா, மாவட்ட குருதி பரிமாற்ற குழும அலுவலா் பரிமேலழகன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.