முகப்பு
கடலூர்

கல்லூரிகளில் சேர முடியாமல் மாணவா்கள் தவிப்பு : அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, கடலூரில் அனைத்துக் கட்சியினா் இணைந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, கடலூரில் அனைத்துக் கட்சியினா் இணைந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2021-22-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ற நிலையில் அவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கு ஆா்வம் காட்டி வருகின்றனா். ஆனால், குறைந்த இடங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவா்களில் பலா் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, நிகழ் கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் ‘ஷிப்ட்’ முறையை அமல்படுத்தி, கூடுதலாக மாணவா்களை சோ்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடலூரில் அரசு மகளிா் கலைக் கல்லூரி, சட்டம், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சாா்பில் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் கோ.மாதவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சொ.திலகா், மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மதிமுக மாவட்டச் செயலா் என்.ராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் த.ஆனந்த், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், மக்கள் அதிகாரம் பாலு, குடியிருப்போா் நலச் சங்க செயலா் மு.மருதவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.