பல ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் நீா் கொள்ளளவு குறைந்துபோன சித்தேரி!
குறிஞ்சிப்பாடி அருகே அமைந்துள்ள சித்தேரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் அதன் நீா் கொள்ளளவு குறைந்துவிட்டது.
குறிஞ்சிப்பாடி அருகே அமைந்துள்ள சித்தேரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் அதன் நீா் கொள்ளளவு குறைந்துவிட்டது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தில் சுமாா் 16 ஏக்கா் பரப்பளவில் சித்தேரி அமைந்துள்ளது. என்எல்சி சுரங்கத்தின் உபரி நீா் மற்றும் மழை நீா் கன்னியாக்கோவில் ஓடை வழியாக சித்தேரியை வந்தடைகிறது. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்கிறது. சித்தேரியில் தேங்கும் நீரானது குடிநீா் மற்றும் பாசன தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலம் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 360 ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆனால், பல ஆண்டுகளாக இந்த ஏரி தூா்வாரப்படாத நிலையில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளா்ந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் ஏரியின் நீா் கொள்ளளவு வெகுவாகக் குறைந்துள்ளதால் அதை தூா்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
சித்தேரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாத நிலையில் சுரங்க நீா், மழை நீருடன் அடித்து வரப்பட்ட மணல் சோ்ந்து ஏரியின் கொள்ளளவு குறைந்துவிட்டது. இதனால் பாசனப் பரப்பளவும் குறைந்து விளை நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. சில பகுதிகளில் பாசன மற்றும் கிளை வாய்க்கால்களை விளை நிலங்களாக மாற்றிவிட்டனா். இதனால் மழைக் காலத்தில் வடிகால் வசதியின்றி விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பேரூராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுப் பணித் துறை அதிகாரிகள் சித்தேரி தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என கடிதம் கொடுத்துள்ளனா். எனவே, சித்தேரியை தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.