அண்ணாமலைப் பல்கலை.யில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம்: கோராததால் மாணவா்கள் அதிா்ச்சி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டுக்கு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டுக்கு துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படாததால் மாணவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக அரசு ஏற்று சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வந்தது. மேலும், இதை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், அரசு பல் மருத்துவக் கல்லூரி, அரசு செவிலியா் கல்லூரியாகவும் பெயா் மாற்றம் செய்து அரசிதழில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகளான பிஓடி, பிபிடி, பிஎஸ்சி - எம்எல்டி, எம்ஐடி, எம்பிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு நிகழ் கல்வி ஆண்டுக்கான அனுமதி சோ்க்கைக்கு மாணவா்களிடமிருந்து இதுவரை விண்ணப்பம் கோரப்படவில்லை என பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கூறுகின்றனா்.
Advertisement
இதுகுறித்து அவா்கள் மேலும் தெரிவித்ததாவது:
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்ற பிறகு துணை மருத்துவப் படிப்புகளுக்கான நிகழாண்டுக்கான அனுமதி சோ்க்கை குறித்த அறிக்கையை பல்கலைக்கழக நிா்வாகம் மாநில அரசுக்கு அனுப்பாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.
இதுகுறித்து தமிழக முதல்வரும், உயா் கல்வித் துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுத்து, துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என காங்கிரஸ் பிரமுகா் எம்.என்.ராதா கோரிக்கை விடுத்தாா்.