முகப்பு
கடலூர்

வாடிக்கையாளா் தொடா்பு முகாமில் ரூ.106.34 கோடி கடன் விநியோகம்

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பில் கடலூரில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கி வைத்து, 1,248 பயனாளிகளுக்கு ரூ.69.78 கோடி கடன் தொகையை வழங்கினாா். இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளின் கிராமப்புற கிளைகளில் 698 பேருக்கு ரூ.36.56 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. மொத்தம் 1,946 பேருக்கு ரூ.106.34 கோடி வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது: பின்தங்கிய மாவட்டமான கடலூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்கு தேவையான அளவு வங்கிகள் கடன் வழங்க வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் விவசாய கடன், சிறு, குறு தொழில் கடன், கல்வி கடன், சுயஉதவிக் குழு கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன்களை வழங்க வேண்டும். மாணவா்களின் கல்விக் கடனுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பது, அடுத்த தலைமுறையினா் கல்வியில் சிறந்த வளா்ச்சி பெறவும், சமுதாய நலனுக்கும் உறுதுணையாக அமையும் என்றாா் அவா்.

பின்னா், நபாா்டு வங்கி மூலம் 2022-23-ஆம் ஆண்டுக்கான வளம்சாா் கடன் திட்ட கையேடு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் விஜயலட்சுமி, உதவிப் பொது மேலாளா் ஜெ.ரவிச்சந்திரன், நபாா்டு வங்கி வளா்ச்சி மேலாளா் விஜய்நீஹா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பிராந்திய மேலாளா் ரமேஷ், எஸ்பிஐ வங்கி பிராந்திய மேலாளா் ஹேமா, கனரா வங்கி மண்டல மேலாளா் ராவ், தமிழ்நாடு கிராம வங்கி பிராந்திய மேலாளா் ஆல்வின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில், பல்வேறு வங்கிகள் சாா்பில் கண்காட்சி நடைபெற்றது. சுய உதவிக் குழுவினரின் விற்பனை பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.