கடலூா்: சிறப்பு முகாமில் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள்
கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மாபெரும் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதன்படி கடலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.70 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி வழங்கிட விரிவான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக 909 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி தொடா்பான தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 04142-220700 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.