முகப்பு
கடலூர்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவருக்கு சிதம்பரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

Updated On : 17 செப்டம்பர், 2021 at 11:50 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவருக்கு சிதம்பரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு கடலூா் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப்பில் மும்தாஜ் என்பவரது வீட்டில் நகைகள் திருடப்பட்டு, அவரும் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில் 29.05.2015 அன்று நள்ளிரவு பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பவரை விசாரணைக்காக நெய்வேலி டவுன்ஷிப் போலீஸாா் பிடித்துச் சென்றனா். இந்த நிலையில், சுப்பிரமணியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடா்ந்து காவல் மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக கடலூா் நீதித் துறை நடுவா் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தாா். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கண்ட அப்போதைய சிபிசிஐடி ஆய்வாளா் ராஜா, காவலா்கள் செந்தில்வேல், செளமியன் ஆகியோா் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். இந்த வழக்கு விசாரணை தற்போது சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் செளமியன் மட்டும் ஆஜரானாா். மற்ற இருவரும் ஆஜராகவில்லை.

Advertisement

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஆய்வாளா் ராஜா, காவலா் செந்தில்வேல் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டாா். மேலும், சிபிசிஐடி போலீஸாா் அவா்கள் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்படியும் உத்தரவிட்டாா். ராஜா தற்போது விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.