முகப்பு
கடலூர்

பொது விநியோகத் திட்டம் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படுமா?

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் ஒரே துறையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
கோப்புப் படம்
பகிர்:

சிதம்பரம்: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் ஒரே துறையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 32,827 நியாய விலைக் கடைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 1,455 நியாய விலைக் கடைகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் 411 கடைகள், முழு, பகுதி நேரக் கடைகள் என மொத்தம் 35,168 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடுகள் தொடா்கின்றன. இதற்கு பொது விநியோகத் திட்டம் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படுவதே காரணம் எனக் கூறப்படுகிறது.

அதாவது, கூட்டுறவுத் துறை, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தொழிலாளா் நலத் துறை ஆகியவற்றின் மூலம் நியாய விலைக் கடைகள் நடத்தப்படுவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு பொருள்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை எனவும் தொடா்ந்து புகாா் கூறப்படுகிறது. எனவே, பொது விநியோகத் திட்டத்தை உடனடியாக ஒரே துறையின்கீழ் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

நியாய விலைக் கடைகள் பல்வேறு துறைகள் மூலம் நடத்தப்படுவதாலும், மேல்மட்டத்திலிருந்து முறைகேடு நடைபெறுவதாலும் அத்தியாவசியப் பொருள்களை பணியாளா்களால் சரியாக விநியோகம் செய்ய முடியவில்லை. எனவே, பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். இதுதொடா்பாக நிகழ் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மேலும், நியாய விலைக் கடைகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் தரமாகவும், சரியான எடையில் பொட்டலமாகவும் வழங்க வேண்டும். தரமற்ற பொருள்களை வழங்கிவிட்டு நியாய விலைக் கடை பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என்றாா் அவா்.

தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா கூறியதாவது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு அரசின் உதவியாளருக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, நுகா்பொருள் வாணிபக் கழக நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு இணையான ஊதியம் அனைத்துப் பணியாளா்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கி வந்த அகவிலைப்படியை தற்போது வழங்காதது ஏற்புடையதல்ல. அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவதுபோல 31 சதவீத அகவிலைப் படியை நியாய விலைக் கடை பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். இணையதள சேவைக் குறைபாட்டால் மக்களுக்கு பொருள்கள் வழங்குவதில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. எனவே, அனைத்துக் கடைகளுக்கும் அதிவேக திறனுள்ள இணையதள மோடம், புதிய விற்பனை முனைய இயந்திரங்களை வழங்க வேண்டும்.

இதுபோன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எங்களது சங்கம் சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை (ஏப்.8) கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.