கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கோயிலில் பாஜகவினர் தேசியக் கொடியை ஏற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடு, நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.
இதையும் படிக்க- ஈரோடு புத்தகத் திருவிழா: வாசகர்களின் தேடலில் முதலிடம் பிடித்த பொன்னியின் செல்வன் நாவல்
இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலையில் பாஜகவினர் தேசியக் கொடியை ஏற்றினர். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நாளைக்கு கொடியேற்றி சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று கொடியேற்றப்பட்டதால் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்றப்பட்ட தேசியக் கொடியை விதிமுறைகளை பின்பற்றியே இறக்க வேண்டும் என்பதால் கொடியை அறநிலையத் துறையினர் இறக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மர்ம நபர்கள் கோயிலில் தேசியக் கொடியை ஏற்றி விட்டதாக புகார் தெரிவித்து உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.