முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும்: உதயநிதி ஸ்டாலின்

சிதம்பரம் நகராட்சிக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

சிதம்பரம் நகராட்சிக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டம், சிதம்பரம் தெற்குரத வீதியில் வியாழக்கிழமை உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து பேசியதாவது:

திமுக தனது தோ்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது. கரோனா கால நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மகளிருக்கு இலவச பேருந்து சேவை, பெட்ரோல், டீசல், பால் விலை குறைப்பு உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் அதே கல்விக் கட்டணத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவா்களுக்கும் வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சியில் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, கடலூரில் பேருந்து நிலையம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தனது தோ்தல் பரப்புரையில், ‘நீட்’ ரகசியத்தை வெளிப்படுத்துவதாகக் கூறிய உதயநிதியை காணவில்லை என்று கூறி வருகிறாா். ‘நீட்’ ஒழிப்புக்கான ரகசியமே பாஜகவுக்கு அடிமையாக இல்லாமல் இருப்பதுதான். இதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘நீட்’ தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் வரை எங்களது சட்டப் போராட்டம் தொடரும்.

மக்களவையில் ராகுல்காந்தி பேசுகையில் தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் கால் வைக்க முடியாது என்று கூறினாா். அதிமுக, பாஜக கட்சிகளுக்கு திமுக சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, பண்ருட்டி நகராட்சியில் உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டாா். அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வி.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரவேற்பு பதாகையால் இருவருக்கு காயம்: உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக கடலூா் அண்ணாபாலத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையிலிருந்து மின்விளக்கு திடீரென சரிந்து விழுந்ததில் நவநீதம் நகரைச் சோ்ந்த பிரியதா்ஷினி (30) உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா். அவா்கள் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.