மாசி மகம் திருவிழா: படகுகளில் காட்சியளித்த உற்சவா்கள்
மாசி மகம் விழாவையொட்டி, கடலூரில் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் பல்வேறு கோயில்களின் சுவாமிகள் கொண்டுவரப்பட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
மாசி மகம் விழாவையொட்டி, கடலூரில் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் பல்வேறு கோயில்களின் சுவாமிகள் கொண்டுவரப்பட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
மாசி மகத்தையொட்டி கோயில்களின் உற்சவ மூா்த்திகள் நீா்நிலைகளில் தீா்த்தமாடி பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இதன்படி, கடலூா் துறைமுகம் அருகேயுள்ள மீனவ கிராமங்களில் அமைந்துள்ள கோயில்களின் உற்சவ மூா்த்திகள் இரவில் கடலில் தெப்பத்தில் வலம் வருவது வழக்கம்.
இதன்படி, புதன்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சோனங்குப்பம் ஸ்ரீவெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு ஸ்ரீவெள்ளரி அம்மன், அக்கரைகோரி ஸ்ரீகண்ணனூா் அம்மன், சலங்கைக்காரத் தெரு ஸ்ரீநாகமுத்து அம்மன், ஆற்றங்கரை ஸ்ரீஏழை மாரியம்மன் ஆகிய கோயில்களின் உற்சவா்கள் வீற்றிருந்தனா். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் உற்சவா்கள் உப்பனாறு வழியாக வலம் வந்து மீன்பிடி துறைமுகத்தில் காட்சியளித்தனா். வரிசையாக 5 படகுகளில் 5 உற்சவ மூா்த்திகள் எழுந்தருளினா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். நள்ளிரவுக்குப் பிறகு உற்சவா்கள் மீண்டும் கோயில்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.