பண்ருட்டி அருகே சிறுவன் கொலை
பண்ருட்டி அருகே சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பாக பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி அருகே சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பாக பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (40). லாரி ஓட்டுநா். இவரது மகன் அஸ்வின் (4). இவா் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் விளையாடச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் அவரது பெற்றோா் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், சிறுவனை மீட்டுத் தரக் கோரி, அவரது உறவினா்கள் கீழக்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது. அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைத்து சென்றனா்.
இதனிடையே கீழக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான முந்திரிக் காட்டில் உடலில் காயங்களுடன் சிறுவன் அஸ்வின் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸாா் சிறுவனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், புதன்கிழமையன்று அஸ்வினை அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Image Caption
அஸ்வின்.