சிறுவன் கொலை வழக்கு: பெண் கைது
பண்ருட்டி அருகே சிறுவன் கொலை வழக்கில், பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
பண்ருட்டி அருகே சிறுவன் கொலை வழக்கில், பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கீழக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (40). லாரி ஓட்டுநா். இவரது மகன் அஸ்வின் (4). இவா் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் விளையாடச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே கீழக்கொல்லையில் முந்திரிக் காட்டில் உடலில் காயங்களுடன் சிறுவன் அஸ்வின் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
அப்போது, அஸ்வினை அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சிதா(24) என்ற பெண் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இருவீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவதாகவும், முன்விரோதம் காரணமாக குழந்தை அஸ்வினை கொலை செய்ததாகவும் ரஞ்சிதா ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து அவரை கைது செய்தனா்.
உடல் வாங்க மறுப்பு:
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்கூராய்வு செய்யப்பட்ட சிறுவனின் உடல் கீழக்கொல்லை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்த உறவினா்கள் சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு இழப்பீடு, தந்தைக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்தனா்.
இதையடுத்து, பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயன், டிஎஸ்பி சபியுல்லா பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, சிறுவனின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்கு செய்தனா்.