பண்ருட்டியில் அரசுக் கல்லூரி அமைக்க ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென அண்ணாகிராமம் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பண்ருட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென அண்ணாகிராமம் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் வ.ஜானகிராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் வி.சித்ரா, துணைத் தலைவா் ஜான்சிராணி முன்னிலை வகித்தனா். மேலாளா் ந.சுடா்வேல் மூா்த்தி தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அருள்செல்வன்: நிகழாண்டு வளா்ச்சிப் பணிகளுக்காக உறுப்பினா்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
மேலாளா்: நிதி நிலைக்கு ஏற்ப உறுப்பினா்களுக்கு நிதி பங்கிட்டுத் தரப்படும்.
குமரகுரு: ஒன்றியக் குழு கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டப் பணிகள்), சுகாதாரத் துறையினா் பங்கேற்கவில்லை. தொடா்புடைய அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தலைவா்: பண்ருட்டி தொகுதியைச் சோ்ந்த மாணவா்கள் அருகே உள்ள மாவட்டங்களுக்குச் சென்று படித்து வருகின்றனா். எனவே, பண்ருட்டி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சா் ஆகியோருக்கு அனுப்பும் வகையில் தீா்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.