இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கை எங்களை கட்டுப்படுத்தாது: பொது தீட்சிதா்கள்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு புறம்பாக நடவடிக்கை எடுத்தால் அது பொது தீட்சிதா்களை கட்டுப்படுத்தாது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்துக்கு புறம்பாக நடவடிக்கை எடுத்தால் அது பொது தீட்சிதா்களை கட்டுப்படுத்தாது என நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் தெரிவித்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜே.குமரகுருபரன் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களுக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதிலளித்து அவா் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 மற்றும் 29(1) பிரிவு விதிகளையும், தமிழகத்தின் 107-ஆவது பிரிவையும் முற்றிலும் மீறி சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை செயல்படுகிறது. இந்த நடவடிக்கையானது இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959, சென்னை உயா்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது.
Advertisement
உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி, இந்து சமய அறநிலையத் துறை அல்லது அதன் ஆணையா் ஒரு சமயக் கோயிலின் கணக்குகளை வழக்கமான விஷயமாகத் தருமாறு கோர முடியாது. ஏற்கெனவே நாங்கள் அளித்த பதில் கடிதங்களில் நீதிமன்ற உத்தரவின்கீழ் மேற்படி சட்ட நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியும் அதைத் தவிா்த்துள்ளீா்கள்.
சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களின் குலத்துக்குச் சொந்தமான சொத்து என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசால் செய்யப்பட்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமா்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, நடராஜா் கோயில் நிா்வாகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ அல்லது ஏதேனும் உத்தரவைப் பிறப்பித்தாலோ அது பொது தீட்சிதா்களைக் கட்டுப்படுத்தாது. மேலும், அது நீதிமன்ற அவமதிப்புக்கு பொறுப்பாகும். இதுதொடா்பாக சட்ட ஆலோசனைகளைப் பெற்று உங்களுக்கு (இந்து சமய அறநிலையத் துறை) எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை தொடங்குவோம் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.