பராமரிப்பின்றி சிதிலமடையும் பழைமையான நீதிமன்றக் கட்டடம்
சிதம்பரம் நகரிலுள்ள மிகவும் பழமையான ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.
சிதம்பரம் நகரிலுள்ள மிகவும் பழமையான ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.
சிதம்பரம், கச்சேரித் தெருவில் நகராட்சி அலுவலகம் அருகே பிரிட்டிஸாா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கட்டடம் அமைந்துள்ளது. பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கட்டடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வந்தது. இந்தக் கட்டடத்துக்குப் பதிலான சிதம்பரம் நகரின் வெளியே சி.முட்லூா் புறவழிச் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நீதிமன்றம் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், பழைமையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உரிய பராமரிப்பின்றி செடிகள் சூழ்ந்து பாழடைந்து காட்சியளிக்கிறது. இதன் நுழைவு வாயில் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. பழைமையான கட்டட வளாகம் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கிருந்து தளவாட பொருள்களும் திருடப்பட்டு வருகின்றன.
Advertisement
எனவே, பழைமையான நீதிமன்ற கட்டடத்தை சீரமைத்து நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று வழக்குரைஞா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.