டாஸ்மாக், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
டாஸ்மாக், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்
டாஸ்மாக், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளா்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கி வந்தது. கரோனா காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி, அது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் நிதிநிலை சீராகியுள்ளதாகத் தெரிகிறது. எனவே, மீண்டும் அவா்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அவா்கள் பணியாற்றும் கூட்டுறவு அமைப்புகளின் லாப - நஷ்ட கணக்குகளின் அடிப்படையில் போனஸ் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கும், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, அனைத்து நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
Advertisement
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு, டாஸ்மாக், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சரவணன், மாவட்டத் தலைவா் அல்லி முத்து, மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.