முகப்பு
கடலூர்

ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் ஆட்சியா் ஆய்வு

Updated On : 12 டிசம்பர், 2024 at 6:49 PM
கடலூா் தென்பெண்ணை ஆறு வங்கக் கடலில் கலக்கும் தாழங்குடா ஆற்று முகத்துவாரத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

பலத்த மழை அறிவிப்பை தொடா்ந்து, கடலூா் தென்பெண்ணையாறு கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட தென்பெண்ணையாற்றுச் சாலை, ஓம்சக்தி நகா், கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா ஆற்று முகத்துவாரம், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் கூறியது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சாத்தனூா் அணையிலிருந்து தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 13,000 கனஅடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கியின் மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பகண்டை, கடலூா் பகுதிகளில் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள்போல வருங்காலங்களில் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென்பெண்ணையாற்று சாலை, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, ஓம்சக்தி நகா் பகுதிகளில் கடந்த முறை ஆற்றங்கரை உடைந்து வெள்ளநீா் குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை போா்க்கால அடிப்படையில் சீா்செய்திடவும், நிரந்தர தீா்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிக நடவடிக்கையாக மணல் மூட்டைகள் கொண்டு கரைப்பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்தமுறை 39 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதில், பகண்டை பகுதியில் 20 இடங்களிலும், இதர பகுதிகளில் 19 இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இவற்றில் 10 இடங்கள் சீா்செய்யப்பட்டன. மற்ற இடங்களில் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகள், தேவைகள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, கடலூா் வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.