பசுந்தாள் உர தக்கைப்பூண்டு விதைகள்விவசாயிகளுக்கு அளிப்பு
வட்டார விவசாயிகளுக்கு மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர தக்கைப்பூண்டு விதைகளை வழங்கினாா்.
சிதம்பரம், ஜூலை 19: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி கீரப்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர தக்கைப்பூண்டு விதைகளை வழங்கினாா்.
கீரப்பாளையத்தில் வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் தமிழக முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், குறுவை பயிா்க் காப்பீடு, உழவன் செயலியின் பயன்கள் மற்றும் செயல்பாடுகள், மண் மற்றும் பாசன நீா் மாதிரி பரிசோதனையின் அவசியம், திரவ உயிரி உரங்களின் வகைகள் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி பங்கேற்று கீரப்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர தக்கைப்பூண்டு விதைகளை வழங்கி கண்காட்சியை பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், சிதம்பரம் வட்டாட்சியா் பா.ஹேமா ஆனந்தி, வேளாண் அலுவலா் சிவப்பிரியன் மற்றும் கீரப்பாளையம், கீழ்நத்தம், சி.மேலவன்னியூா், வடஹரிராஜபுரம், ஆயிப்பேட்டை, வயலூா், சி.வீரசோழகன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.