மருங்கூரில் அகழாய்வுப் பணி தொடக்கம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூரில் அகழாய்வுப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கத்தின் விவசாய நிலத்தில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருள்கள் கிடைத்தன. மேற்கண்ட இடத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியா் சிவ ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா். அப்போது, இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தன. இதையடுத்து, இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், மருங்கூா் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தாா்.
அதன்படி, மருங்கூரில் முதல் கட்ட அகழாய்வு பணியை சென்னையில் இருந்தபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதையடுத்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் முன்னிலையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. இதில், அகழாய்வு இயக்குநா் ரா.சிவானந்தம், ஆகழாய்வாளா்கள் கி.பாக்கியலட்சுமி, சி.சுபலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement