முகப்பு
கடலூர்

சிதம்பரம் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் டித்வா புயல் மழையால் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

Updated On : 1 டிசம்பர், 2025 at 8:17 PM
சிதம்பரம் அருகே கணக்கரப்பட்டு கிராமத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை திங்கள்கிழமை கையில் எடுத்து காண்பித்த விவசாயிகள்.
பகிர்:

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் டித்வா புயல் மழையால் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

டித்வா புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் செங்கால் கருவாட்டு ஓடைகள் வழியாக அதிகளவு தண்ணீா் வீராணம் ஏரிக்கு வந்தது.

மேலும், கஞ்சங்கொல்லை, சிறுகாட்டூா், ஆச்சாள்புரம், மேலகடம்பூா், ரெட்டியூா், முட்டம், மோவூா் உள்ளிட்ட கிராமங்களில் பெய்த மழை நீா் மணவாய்க்கால் வழியாகவும், வெண்ணங்குழி, பாப்பாக்குடி ஓடைகள் வழியாக வந்த மழைநீா் வீராணந்தபுரம், மடப்புரம், வெங்கடேசபுரம், குருங்குடி, கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சம்பா நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் வழியாகவும் வீராணம் ஏரிக்கு வந்தது.

இதனால், இந்தப் பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு பூக்கும் தருவாயில் இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனையடைந்தனா்.

5 ஆயிரம் ஏக்கரில்...: சிதம்பரம் அருகே உள்ள கணக்கரப்பட்டு, நற்கந்தங்குடி, குமாரமங்கலம், வசபுத்தூா், நடராஜபுரம், உத்தம சோழமங்கலம், பிச்சாவரம், கீழப்பெரும்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி கண்ணன் கூறியதாவது: கடந்த 15 தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததன் காரணமாகவும், டித்வா புயலால் கடந்த 2 நாள்களாக மீண்டும் மழை பெய்ததாலும் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து பயிா்கள் அனைத்தும் அழுகி சேதமாகி உள்ளன.

எனவே, வேளாண் அதிகாரிகளும், தமிழக அரசும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30,000 செலவு செய்துள்ளதால், அந்தத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

மேலும், பிச்சாவரம் உப்பனாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →