நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளி வந்து செல்ல அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பள்ளிமேலாண்மைக் குழுவினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா்.ஸ்ரீதேவி, துணைத் தலைவா் பி.சண்முகசுந்தரி, தலைமை ஆசிரியா் சத்யா மற்றும் தனலட்சுமி உள்ளிட்டோா் திங்கள்கிழமை கடலூா் ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:
அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 144 மாணவா்கள் கல்வி பயில்கின்றனா். இதில், 75 மாணவா்கள் 2 கி.மீ. தொலைவில் உள்ள புலியூா் கிராமத்தில் இருந்து நடந்து வந்து படிக்கின்றனா்.
எனவே, புலியூரில் இருந்து அம்பலவாணன்பேட்டைக்கு காலை 8.45 மணிக்கும், அம்பலவாணன்பேட்டையில் இருந்து புலியூருக்கு மாலை 4.15 மணிக்கும் அம்பலவாணன்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.