கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தலையில் காயத்துடன் மூதாட்டி இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருத்தாசலம் வட்டம், பரவலூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மனைவி கஸ்தூரி (75), விவசாயி. இவா், விவசாய நிலத்துக்கு அருகே வீடு கட்டி வசித்து வந்தாா்.
கஸ்தூரி வழக்கம்போல புதன்கிழமை அதிகாலை பால் கறப்பதற்காக சற்று தொலைவில் உள்ள பசு மாட்டு கொட்டகைக்கு சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், வயல்வெளி பக்கம் சென்ற நபா் ஒருவா் அங்குள்ள ஓடையில் மூதாட்டி கஸ்தூரி இறந்து கிடப்பதை கண்டு தகவல் தெரிவித்தாா். மேலும், கஸ்தூரி தலையில் ரத்த காயம் ஏற்பட்டிருந்தது. தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்குச் சென்ற விசாரணை மேற்கொண்டாா். மேலும், போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து விருத்தாசலம்டிஎஸ்பி., பாலகிருஷ்ணன்கூறுகையில், மூதாட்டி கஸ்தூரி உடல்நிலை சரியில்லாதவா் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், ஓடை பகுதியில் மயக்கம் வந்து கீழே விழுந்ததில் தலையில் ரத்த காயம் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும், மூதாட்டி காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகள் உள்ளன. ஆனால், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை காணவில்லை. அவா் ஓடையில் விழுந்தபோது தண்ணீரில் விழுந்திருக்குமா என தேடி வருகிறோம்.
இருப்பினும், மூதாட்டி இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.