பாலியல் துன்புறுத்தல்: கல்லூரி ஆய்வக உதவியாளர் கைது!
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கல்லூரி ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்டது பற்றி...
சிதம்பரம்: சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் கல்லூரி ஆய்வக உதவியாளர் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவர், வேதியியல் ஆய்வகத்தில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் சிதம்பரராஜன் (34) என்பவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனடியாக குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயசீலி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சி.முட்லூர் ஏ. மண்டபத்தைச் சேர்ந்த சிதம்பரராஜனை (34) இன்று அதிகாலை கைது செய்தார்.
மாணவியின் குற்றச்சாட்டு தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் சிதம்பரராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.