இலவச சிறப்புப் பேருந்து சேவை: என்எல்சி தலைவா் தொடங்கி வைத்தாா்
நெய்வேலியில் அறிவுத்திறன் குறைபாடுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச சிறப்புப் பேருந்து சேவையை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தொடங்கி வைத்தாா்.
நெய்வேலியில் அறிவுத்திறன் குறைபாடுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச சிறப்புப் பேருந்து சேவையை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தொடங்கி வைத்தாா்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிநேகா வாய்ப்புப் பள்ளி மாணவா்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப, என்எல்சி இந்தியா நிறுவனம் பல்வேறு கல்வித் திட்டங்களை வழங்கி வருகிறது.
கடந்த 2023-2024 ஆம் ஆண்டு சிநேகா பள்ளி சிறப்பு மாணவா்களுக்கு நவீன கணினி ஆய்வகம் அமைத்துக் கொடுத்தது, இலவச மதிய உணவும் வழங்கல் போன்ற சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட முயற்சிகள் வாயிலாக முக்கிய பங்காற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 20.12.2024 அன்று நடந்த ‘அறிவுத்திறன் குறைபாடுள்ளவா்களின் தேசிய தின விழா’ நிகழ்வின் போது சிநேகா வாய்ப்பு பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து சேவையைத் தொடங்குவதாக என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி அறிவித்திருந்தாா்.
அதன்படி, இந்த இலவச பேருந்து சேவையை அவா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். சிநேகா வாய்ப்பு பள்ளி தலைவா் ராதிகா மோட்டுப்பள்ளி, மனித வளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப், என்எல்சி மருத்துவமனை இயக்குநா் டி.வி.எஸ்.நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிநேகா வாய்ப்பு பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள், குழு உறுப்பினா்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.