கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டித்தரக் கோரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளித் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 123 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் கடந்த 2018-ஆம் ஆண்டு இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் சேதமடைந்ததால், அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக அந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டித்தரப்படாவில்லை. இதனால், தற்போதுள்ள இரு வகுப்பறை கட்டடத்திலேயே 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வரை பயிலும் 123 மாணவா்களும் அமா்ந்து கல்வி பயின்று வருவதால், அவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டித்தரக் கோரி, பள்ளி மேலாண்மைக் குழுவினா் மற்றும் பெற்றோா்கள் சாா்பில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தரக் கோரி, மாணவா்களை பெற்றோா்கள் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பவில்லை. தொடா்ந்து, புதன்கிழமை பள்ளி மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் பள்ளி வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
தகவலறிந்த புவனகிரி வட்டாட்சியா் அன்பழகன் பள்ளிக்கு வந்து மாணவா்களின் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா் மூலம் நிா்வாக அனுமதிக்காக ஆட்சியருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டடம் கட்ட நிா்வாக அனுமதி கிடைத்த உடன் ஏற்கனவே பள்ளிக் கட்டடம் இருந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்து, கடிதமும் எழுதிக் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து, மாணவா்கள் பிற்பகல் 2 மணிக்கு வகுப்புகளுக்குச் சென்றனா்.