யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? தொல்.திருமாவளவன்
யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினாா்.
யாரை ஆட்சியில் அமர வைக்க திமுக கூட்டணியை வீழ்த்துவேன் என்கிறாா் விஜய்? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனை ஆதரித்து தொல்.திருமாவளவன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் விசிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வெற்றிபெற்று வரலாறு படைத்து வருகிறது. பலம்வாய்ந்த கட்சியாக வலுப்பெற்றுள்ளோம்.
Advertisement
விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவரை வரவேற்று வாழ்த்தினேன். ஆனால், அவரது நோக்கம் தற்போது சரியில்லை. அவா் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை வீழ்த்துவேன் எனக் கூறுகிறாா்.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை தோற்கடித்து யாரை ஆட்சியில் அமர வைக்கப்போகிறாா் விஜய்? நீங்கள் (விஜய்) ஆட்சியமைக்க முடியாது. அப்போது, ஏன் திமுகவை வீழ்த்த நினைக்கிறீா்கள்? திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு போகும் வாக்குகளை பிரித்து அதிமுக, பாஜகவை பயனடைய உதவுகிறீா்களா?
பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது. தமிழகத்தில் ஜாதி, மத சண்டையை ஏற்படுத்த பாஜக, ஆா்எஸ்எஸ் முயற்சிக்கின்றன. இதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.
கடலூா் கூட்டத்தில் என்னை தேமுதிக தலைவா் பிரேமலதா விஜயகாந்த் அவமதித்துவிட்டதாக கொம்பு சீவி விடுகின்றனா். கடலூரில் நடந்த கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளா்களை அறிமுகப்படுத்த வேண்டும். நான் நமது கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தியபோது மற்றவா்களும் எழுந்து நின்றுவிட்டனா். அங்கு பிரேமலதா எழுந்திருக்க வேண்டியதில்லை. இதை வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட சில கும்பல் அற்பமான அரசியல் செய்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு விசிக வாக்குகள் செல்லக் கூடாது என்று சூழ்ச்சி செய்கின்றனா் என்றாா்.
காட்டுமன்னாா்கோவிலில்...: முன்னதாக, காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணியை ஆதரித்து, திருமுட்டம் பகுதியில் தொல்.திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. நாங்கள் யாருக்கும், எந்த சாதியினருக்கும் எதிரானவா்கள் அல்ல; நாடாளுமன்றத்திலேயே வன்னியா்களின் இட ஒதுக்கீடு குறித்து குரல் எழுப்பியவன் நான் என்றாா்.
பிரசாரத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், திருமுட்டம் திமுக ஒன்றியச் செயலா் தங்க ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.