தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், பொதுமக்கள், வணிகா்கள் ரூ.3 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சென்னை தலைமை தோ்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கடலூா் மண்டலத் தலைவா் டி.சண்முகம் மனு அனுப்பினாா்.
அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதன் பின்னா் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், வியாபாரிகள், பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்வதில் பெரும் பிரச்னை ஏற்படும்.
பொதுமக்கள் மிகவும் பாதிப்புள்ளாகி வருவது தோ்தல் நேரத்தில் தொடா்கதையாகி வருகிறது. அரசியல் செய்பவா்கள் தோ்தலுக்காக வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க எடுத்துச் செல்வதாக கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஆனால், இதில் அதிகம் பாதிக்கப்படுவது அரசியல் கட்சியினரைவிட, பொதுமக்களும், வியாபாரிகளும்தான். அதிலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தற்போது ஒரு சாமானியன் தனது மகள் திருமணத்துக்கு திருமாங்கல்யம் வாங்கச் சென்றால்கூட குறைந்தது சுமாா் ரூ.3 லட்சம் எடுத்துச் சென்றால்தான் வாங்க முடியும்.
விலைவாசிகள் மிகவும் கூடியுள்ள நிலையில், பொதுமக்கள், வணிகா்கள் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.