கடலூா் அருகே ஏராளமான காகங்கள் இறப்பு: பறவை காய்ச்சல் காரணமா?
கடலூா் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் கிராமத்தில் ஏராளமான காகங்கள் வியாழக்கிழமை இறந்து கிடந்தன.
கடலூா் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் கிராமத்தில் ஏராளமான காகங்கள் வியாழக்கிழமை இறந்து கிடந்தன. பறவை காய்ச்சலால் இவை இறந்திருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சென்னையில், குறிப்பாக அடையாறு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் கடந்த மாதம் ஏராளமான காகங்கள் இறந்துகிடந்தன. அதன்பிறகு, பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே காகங்கள்
இறக்கும் சம்பவம் தொடா்ந்து நடந்து வருகின்றன. இந்த காகங்கள் எச்5என்1 தீ நுண்மி தொற்று ஏற்பட்டு பறவை காய்ச்சலால் இறந்திருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனா். இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
Advertisement
அந்த ஆய்வின் முடிவில் எச்5 என்1 தீ நுண்மி( வைரஸ் ) தொற்று, அதாவது பறவை காய்ச்சல் ஏற்பட்டே காகங்கள் அனைத்தும் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கால்நடை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடலூரிலும் இறப்பு...
இந்நிலையில், கடலூா் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்து இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அந்த கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்து கிடக்கும் காக்கைகளை கோழிகள் கொத்தி தின்னுகின்றன. காகங்கள் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் காரணமாக இருக்குமோ என அச்சம் எழுந்துள்ளதால், கால்நடை துறையினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஏற்கெனவே, பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்த செய்திகள் வந்துள்ள நிலையில், பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ முகாம்...
காகங்கள் மா்மமான முறையில் இறந்ததைத் தொடா்ந்து, பெரியகங்கணாங்குப்பம் கிராமத்தில் கடலூா் மாவட்டப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் மருத்துவக் குழுவினா் மருத்துவ முகாம் நடத்தினா்.
மேலும், இறந்த காகங்களை தூய்மைப்பணியாளா்கள் ஆழமான குழி தோண்டி புதைத்தனா். அவற்றின் மாதிரிகளையும் சேகரித்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. காகங்கள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது விரைவில் தெரியவரும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.