பேடிஎம் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.7.61 லட்சம் மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம், பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு பேடிஎம் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, மா்ம நபா் இணையவழியில் ரூ.7,61,050-ஐ ஏமாற்றிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவரைப் பிடிக்க கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.ரகுபதி மேற்பாா்வையில், ஆய்வாளா் கவிதா விசாரணை மேற்கொண்டாா்.
இதில், செல்வத்தை ஏமாற்றியது கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சோ்ந்த எஸ்.பெருமாள் (39) என்பது தெரியவந்ததால், கடலூா் இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் அங்கு சென்று அவரை கைது செய்தனா். பின்னா், பெருமாளை கடலூருக்கு அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனா்.