பிறப்புச் சான்றிதழில் குழந்தை பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பிறப்பு பதிவு ஓராண்டுக்குள் பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து கட்டணமின்றி பெயா் பதிவு செய்திடலாம். ஓராண்டுக்குப் பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.
15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி, 1.1.2000-அன்றுக்கு முன்னா் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000 அன்றுக்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயா் வைத்து பிறப்பு சான்றிதழ் பெற 26.9.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்ய நகராட்சி அல்லது வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநா் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
இதுபோன்ற கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்க இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.