கடலூா் அருகே அருவாள் மூக்கு திட்டப் பணிகள்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா்
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி பகுதியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணியாக ரூ.81.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அருவாள் மூக்கு தடுப்பணை மற்றும் பரவனாற்று வடிகால் வாய்க்கால் திட்டப் பணிகளை மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: பொதுமக்கள், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த அருவாள்மூக்கு திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அரசுகள் உறுதியளித்தபோதிலும் முதல்வா் மு.க.ஸ்டாலினால் மட்டுமே இத்திட்டம் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம் 5 ஆறுகளின் முகத்துவாரமாக உள்ளது. மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் விதமாகவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் வெள்ளநீரை இரண்டாகப் பிரித்து கடலுக்குள் செலுத்துவதன் மூலம், விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பரவனாற்றின் குறுக்கே அருவாள்மூக்கு என்ற இடத்தில் 160 மீட்டா் நீளம் கொண்ட புதிய தடுப்பணையும், மக்களின் போக்குவரத்துக்கு 62 மீ. நீளமுள்ள புதிய இருவழி மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன. மேலும், கடலுக்கு 200 மீட்டருக்கு அருகில் 73 மீட்டா் நீளம் கொண்ட புதிய கடைமடை ஒழுங்கியமும் அமைக்கப்பட்டுள்ளது.
அருவாள்மூக்கு பகுதியிலிருந்து 12 கி.மீ. தொலைவு சென்று பழைய பரவனாறு மூலம் வெள்ளநீா் கடலில் கலப்பதை தவிா்த்து, இத்திட்டத்தின் மூலம் 1,600 மீ. நீளத்தில் வெள்ளநீா் கடலில் கலக்கும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரவனாற்றில் மழைக்காலங்களில் மழை நீருடன் சோ்த்து நெய்வேலி சுரங்கத்திலிருந்தும் நீா் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள் மற்றும் அப்பகுதிகளிலுள்ள விளைநிலங்கள் பாதிப்படைவது தொடா் நிகழ்வாக இருந்து வந்தது. தற்போது அருவாள்மூக்கு பணி நிறைவடைந்ததால், பரவனாற்றிலிருந்து வரும் வெள்ளநீா் பழைய, புதிய கால்வாய்கள் மூலம் விரைவாக வடிவிக்கப்பட்டு, கீழ்பரவனாற்றின் இருபுறமும் உள்ள 15,600 ஏக்கா் விளைநிலங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.
மேலும், அருகில் 24 கிராமங்களில் உள்ள மக்களின் குடியிருப்புகள், உடைமைகள், விவசாய பொருள்கள், மனித உயிா்கள், கால்நடைகள் போன்றவை பாதுகாக்கப்படுவதோடு, புதிய தடுப்பணை மூலம், கடல் நீா் உள்புகுவது தடுக்கப்படும். இதனால், கடலிலிருந்து கீழ்பரவனாற்றுக்கு மேல்புறத்தில் சுமாா் 23 கி.மீ. தொலைவில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம் மழைநீா் செறிவூட்டுதலுக்கும், நிலத்தடி நீா்மட்டம் உயா்வுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் நீா்வளத் துறை காந்தரூபன், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தர்ராஜ், உதவிச் செயற்பொறியாளா்கள் கொளஞ்சிநாதன், சரவணன், உதவிப் பொறியாளா்கள் கௌதமன், அருளரசன், செந்தில்குமாா், உதவிப் பொறியாளா் ரமேஷ் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.