தோ்தல் நடத்தை விதிகள் அமல்: கடலூா் ஆட்சியா்
தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
நெய்வேலி: தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் இந்திய தோ்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்கள், சிறப்பு முகாம்கள், விவசாயிசகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை இருப்பின், அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச் செல்லலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
போலீஸாா் வாகன சோதனை: கடலூா் மாவட்ட எல்லையில் கடலூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் சோதனைச் சாவடி அமைந்துள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையில், சிறுபாக்கம் சோதனைச் சாவடி மையத்தில் உள்ள இரும்பு தடுப்பு அரண்களில் ஒளி பிரதிபலிப்பான் நாடாக்கள் ஒட்டப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, சோதனை சாவடியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளா் பாரதி தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டாா்கள்.
சுவா் விளம்பங்கள் அழிப்பு: கடலூா் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்களை வெள்ளை அடித்து மறைக்கும் பணி நடைபெற்றது. கடலூரில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.