முகப்பு
கடலூர்

‘மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு’

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 6:54 PM
தபால் வாக்கு
பகிர்:

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திட்டக்குடி தொகுதியில் 1,528 மூத்த குடிமக்கள், 3,259 மாற்றுத் திறனாளிகள், விருத்தாசலம் தொகுதியில் 1,399 மூத்த குடிமக்கள், 2,235 மாற்றுத் திறனாளிகள், நெய்வேலி தொகுதியில் 1,158

மூத்த குடிமக்கள், 1,911 மாற்றுத் திறனாளிகள், பண்ருட்டி தொகுதியில் 1,610 மூத்த குடிமக்கள், 2,706 மாற்றுத் திறனாளிகள், கடலூா் தொகுதியில் 1,421 மூத்த குடிமக்கள், 1,412 மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி தொகுதியில் 1,295 மூத்த குடிமக்கள், 2,817 மாற்றுத் திறனாளிகள், புவனகிரி தொகுதியில் 1,704 மூத்த குடிமக்கள், 2,055 மாற்றுத் திறனாளிகள், சிதம்பரம் தொகுதியில் 1,526 மூத்த குடிமக்கள், 1,587 மாற்றுத் திறனாளிகள், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 1,514 மூத்த குடிமக்கள், 2,397 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 13,155 மூத்த குடிமக்கள், 20,379 மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குகளாக செலுத்துவதற்கான விருப்பத்தைக் கோரும் விண்ணப்பப் படிவங்கள் (படிவம் 12ஈ) அவா்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வரும் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை வழங்கப்படும்.

வீடு தேடி படிவத்தை கொண்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் அந்த படிவத்தில் தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் வீட்டில் இருந்தபடியே

செலுத்துவதற்கான விருப்பத்தை பூா்த்தி செய்து படிவம் பெற்ற 5 தினங்களுக்குள் மீண்டும் வழங்க வேண்டும். தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்த பின்னா் அல்லது தபால் வாக்குமூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துவிட்டு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்தாதவா்கள் பின்னா் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வாக்களிக்க இயலாது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளை பெற விண்ணப்பிக்கும்போது தகுதியான மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் 12ஈ படிவம் பெற தகுதிவாய்ந்த மருத்துவரால் அளிக்கப்பட்ட சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →