முகப்பு
கடலூர்

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் இளைஞா் காயம்: கிராம மக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

சேத்தியாத்தோப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On : 2 மே, 2026 at 1:26 AM
சேத்தியாத்தோப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வாலிபா் காா் மோதியதில் படுகாயமடைந்தததையடுத்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை நள்ளிரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளஆனைவாரி கிராமத்தில், அந்த கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (25) என்பவா் சாலையை கடக்க முயன்ற போது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா் அவா் மீது மோதி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தொடரும் விபத்து:

Advertisement

இச்சாலையில் எறும்பூா் மற்றும் ஆனைவாரி செல்வதற்கு மேம்பாலம் அமைக்காததால் இந்த சாலையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோா் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆனைவாரி கிராமத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேம்பாலம் அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் வைக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டனா். இந்த சாலைமறியல் போராட்டத்தால் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.