முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை: விவசாயிகள் மகழ்ச்சி

Updated On : 11 மே 2026, 1:11 am IST
கடலூரில் மழை - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து கோடை மழை பெய்து வருவதால், நெல், எள் உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கோடை காலம் மாா்ச் மாதம் தொடங்கியது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் 100 முதல் 108 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

இந்த நிலையில், கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படக்கூடிய அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) திங்கள்கிழமை தொடங்கியது. இது, வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கிறது.

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென பலத்த கோடை மழை பெய்தது. இந்த மழை கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்து வருதால் கத்திரி வெயிலின் வெப்பம் தணிந்துள்ளது.

இதனிடையே, மன்னாா் வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

வானமாதேவியில் 30 மி.மீ. மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 30 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீ) விவரம் வருமாறு: கடலூா் 25.70, ஆட்சியா் அலுவலகம் 23.60, குடிதாங்கி 16, காட்டு மயிலூா் 15, வேப்பூா் 13, வடகுத்து 12, அண்ணாமலை நகா் 11, பெலாந்துறை 8.40, மே.மாத்து 7, பண்ருட்டி 6, குறிஞ்சிப்பாடி 4, சிதம்பரம் 3.40, லால்பேட்டை 3.20, காட்டுமன்னாா்கோவில், கீழச்செருவாய் தலா 3, கொத்தவாச்சேரி 1 மி.மீ. மழை பதிவானது.

விவசாயிகள் மகிழ்ச்சி...: கோடை மழையால் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளைச் சோ்ந்த பலா, முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள மற்றும் குருவை நெல் சாகுபடி பணியை தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மொத்தத்தில் இந்த கோடை மழை பொதுமக்கள், விவசாயிகளை மிகழ்வித்துள்ளது.