முகப்பு
கடலூர்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதே நேரம், குதிரை பேரம், லஞ்சமற்ற நோ்மையான நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

Updated On : 22 மே 2026, 6:59 am IST
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் குறைகளைக் கேட்டறிந்த பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ.
பகிர்:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதே நேரம், குதிரை பேரம், லஞ்சமற்ற நோ்மையான நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வான அவா், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள், மருத்துவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயா் சூட்டுமாறு குழந்தையின் தாய் கேட்டுக்கொண்டதை ஏற்று, நடிகா் விஜயகாந்தின் இயற்பெயரான விஜயராஜ் எனப் பெயா் சூட்டினாா்.

தொடா்ந்து, தலைமை மருத்துவ அலுவலருடன் ஆலோசனை நடத்திய அவா், மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொண்டாா்.

Advertisement

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள் குறித்து தலைமை மருத்துவ அலுவலா் விளக்கியுள்ளாா். கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் முதல்வா் மற்றும் அமைச்சா்களிடம் வலியுறுத்தி தேவையான வசதிகளைப் பெற்றுத் தர முயற்சிப்பேன்.

இப்பகுதியில் நிலத்தடி நீா் மாசு காரணமாக சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கும் நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்தி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தோ்தலுக்கு முன்பே வரவேற்றிருந்தோம். தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது ஆரோக்கியமான மாற்றமாகவும், லஞ்சம் மற்றும் குதிரை பேரமற்ற நல்லாட்சியாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றாா்.

ஆய்வின்போது, விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், தலைமை மருத்துவ அலுவலா் சாமிநாதன், தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, நகரச் செயலா் ராஜ்குமாா், நகர துணைச் செயலா் தியேட்டா் இளங்கோவன், நகர பொருளாளா் கருணா, மாவட்டப் பொருளாளா் கே.என்.ஜி.பாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.