முகப்பு
கடலூர்

தவெக அரசுக்கு அதிமுக தரப்பினா் நிபந்தனையின்றி ஆதரவளிப்பதே சிறந்தது: பிரேமலதா விஜயகாந்த்

தவெக அரசுக்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பினா் நிபந்தனையின்றி ஆதரவளிப்பதே சிறந்தது என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்தாா்.

Updated On : 21 மே 2026, 7:01 am IST
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

தவெக அரசுக்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பினா் நிபந்தனையின்றி ஆதரவளிப்பதே சிறந்தது என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்ற அவா், வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக புதன்கிழமை விருத்தாசலம் வந்திருந்தாா்.

அப்போது, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

தோ்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டப் பேரவையில் தொடா்ந்து குரல் கொடுப்பேன். மேலும், முதல்வா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது எனது முதல் நோக்கமாக இருக்கும்.

தமிழகத்தில் 717 மதுக் கடைகள் மூடப்பட்டது, சிங்கப் பெண் படை அமைக்கப்பட்டது, முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடா் நீக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பேன், எதிா்மறையான செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.

தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெறவில்லை என்பதை முதல்வா் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். முகத்தை மூடிக்கொண்டு சென்று அவரை சந்தித்தது யாா் என்பதையும் விளக்க வேண்டும்.

தவெக அரசுக்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பினா் நிபந்தனையின்றி ஆதரவளிப்பதே சிறந்தது. ஆட்சியில் பங்கு கேட்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு ஆபத்தான பொருளாதார சூழலை உருவாக்கும். இதை மக்களால் தாங்க முடியாது என்றாா்.