கள்ளக்குறிச்சி: உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், வாக்காளா் பட்டியல் தயாரித்தல் பணி குறித்த ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், வாக்காளா் பட்டியல் தயாரித்தல் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை 19 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 180 ஒன்றிய ஊராட்சி வாா்டுகள், 3,162 கிராம ஊராட்சி வாா்டுகள் வாரியாக தொடா்புப் படுத்தும் பட்டியல், 9 ஊராட்சி ஒன்றியங்களில் விரைவு வாக்குச் சாவடி பட்டியல் தயாா் செய்தல் போன்ற பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவற்றில் நல்ல நிலையில் உள்ள கட்டடங்களை தோ்வு செய்து வாக்குச் சாவடி மையங்களை அமைக்கவும், உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தயாராக செய்து முடிக்கவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) இரா.மணி திட்ட இயக்குநா் (மாநில ஊரக வாழ்வாதர இயக்ககம்) சு.தேவநாதன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சு.சுகுமாரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.மஞ்சுளா மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.