கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூரில் புதுப்பட்டு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தத் திருவிழா கடந்த மாா்ச் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்வும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் இரவு அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. புதுப்பட்டு மாரியம்மன் தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள், பொதுமக்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். விழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 14) மாலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வும், வருகிற 20-ஆம் தேதி எட்டாம் தோ்த் திருவிழாவும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை நல்லாத்தூா் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.